• குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல் -

    தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்குச் சென்ற 9 பேர் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன்.

    மலையேறும் பயிற்சிக்காக சென்ற 39 பேர் தீவிபத்தில் சிக்கி, உயிருக்கு போராடிய சம்பவம் மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும். இதில் 9 பேர் பரிதாபமாக இறந்தும், 4 பேர் 90 சதவிதம் அளவிற்கு தீக்காயம் அடைந்து,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் துரதிருஷ்டவசமான சம்பவமாகும்.

    மலையேற்ற பயிற்சிக்கு உரிய பாதுகாப்பும், வனத்துறையினரால் சரியான வழிகாட்டுதலும் இருந்ததா என்பதை தமிழக அரசு விளக்கவேண்டும். இதுபோன்ற ஆபத்து நிறைந்த வனப்பகுதியில் செல்பவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவி போன்ற, நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு அவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்துகொள்ளும் அளவிற்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்படாமலிருக்க வனத்துறையும். தமிழக அரசும் ஒருங்கிணைந்து திட்டங்கள் வகுக்க வேண்டும்.

    இத் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த  9 பேரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்களின் குடும்பத்தினருக்கு போதிய இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அரசு தன் பொறுப்பில் ஏற்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், இத் தீவிபத்திற்கான காரணம் குறித்து ஆராய, விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டுமெனவும் தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.