• “மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்“ தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி - IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் செய்தி

    உலகப் புகழ் பெற்ற ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன், அரியலூர் - கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக நிர்மானித்து சுமார் 267 ஆண்டுகள் தெற்காசியாவை ஒரு நாட்டின் கீழ் கட்டியாள வழிவகுத்தவர். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கங்கைகொண்ட சோழபுரத்தில் இவரால் உருவாக்கப்பட்ட அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

    மாமன்னர் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் பொருட்டு, இவரின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கங்கைகொண்ட சோழபுரம் கிராம மக்களும்,  மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.  என உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    அன்புடன்,

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)