Loading...

செய்திகள்

May 19, 2023
News Image

‘தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது’உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் P.ஜெயசீலன் அவர்களின் வரவேற்பு அறிக்கை

இளைஞர்களை எழுச்சியுடனும் – உற்சாகத்துடனும் ஊக்குவிக்கும் நம் நாட்டின் பாரம்பரிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இளைஞர்களின் எழுச்சியில் எப்போதும் இந்திய ஜனநாயகக் கட்சி துணைநிற்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஜல்லிக்கட்டு போட்டியின் மீது தீராத பற்றுகொண்ட எங்கள் தலைவர் இளையவேந்தர் ரவிபச்சமுத்து அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது நடைபெற்ற போராட்டத்திற்கு தீவிர ஆதரவு அளித்ததோடு, தொடர்ந்து நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளையும் செய்துவருகின்றார். அதன் நீட்சியாக சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ஐஜேகே-வின் சார்பாக தமிழர் பாரம்பரிய மீட்பு திருவிழாவில் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் கலந்துகொண்டு, நாட்டு இன மாடுகள் பற்றியும் அவற்றின் பாதுகாப்பு முறைகள் பற்றியும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் சிறப்புரையாற்றினார். அதுமட்டுமல்லாமல், நாட்டு இன நாய்கள் உரிமை மீட்பு மாநாடுகள் தென்காசி மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தபோது, தலைவர் இளையவேந்தர் ரவிபச்சமுத்து அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பாரம்பரிய கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பெரும் ஆதரவு நிலைப்பாட்டினை தெரிவித்தார்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் எண்ணப்படி, தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, விசாரணையின் முடிவில் அளித்துள்ள ‘தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது’ என்ற வரலாற்று சிறப்புமிக்க  இத்தீர்ப்பினை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

 

Back to News