தமிழ்மொழி வளர்ச்சிக்காகவே “தமிழ்நாடு” என்ற தினஇதழை தொடங்கித் தமிழர்கள் மத்தியில் எழுச்சியூட்டிய பெருமை கருமுத்து தியாகராய செட்டியார் அவர்களுக்கு உண்டு. அவரது வழியில் தமிழ்ப்பணிகளையும் பல்வேறு அறப்பணிகளையும் செய்து சிறப்புப் பெற்றவர் அவரது அன்பு மகன் கருமுத்து தி. கண்ணன் அவர்கள்.
தமிழ்ப்பல்கலைக்கழகம் என்று சொல்லும் விதத்தில் பல தமிழ் அறிஞர்கள் பேராசிரியர்களாகப் பணியாற்றி ஆற்றல் மிக்க பல கவிஞர்களை, அறிஞர்களை உருவாக்கிய தியாகராசர் கல்லூரியின் தாளாளராகக் கல்விப்பணியையும் தமிழ்ப்பணியையும் ஒருசேர ஆற்றிய பெருமைக்குரியவர் கருமுத்து தி.கண்ணன் அவர்கள்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தக்காராகத் தொடர்ந்து 16 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வரலாற்றுச் சிறப்புமிக்க அத்திருக்கோயிலின் வளர்ச்சிக்குப் பலவிதங்களில் பணியாற்றிய பெருமைக்குரியவர் அவர்.மத்திய ஜவுளி வாரியத்தலைவராகவும் துணிகள் உற்பத்தி செய்யும் நிறுவன அதிபராகவும் பன்முகத்திறன் கொண்ட பண்பாளர் அவர். அவரது அரியபணிகளுக்கு அங்கீகாரமாகத் தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்ற சேவைச்செம்மல் கருமுத்து தி. கண்ணன் அவர்களின் எதிர்பாராத மறைவு கல்வி உலகிற்கு மட்டுமின்றி தமிழ் உலகிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வருத்தங்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
நிறுவனர் - இந்திய ஜனநாயகக் கட்சி
வேந்தர் - SRM பல்கலைக்கழகம்
Powered by iPOT Technologies