உழைக்கும் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் , தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நன்றியுணர்ச்சியின் நல்லதொரு அடையாளமே பொங்கல் திருநாள். விவசாயத்திற்கு மழைகொடுத்து - பயிர் வளர்த்து – உயிர் காக்கும் இயற்கைக்கும் – இறைவனுக்கும் - கால்நடைகளுக்கும் நாம் என்றென்றும் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும். பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைக்கும் தொழிலான உழவுத்தொழில் உலகில் மற்ற தொழில்களைவிட மிகவும் மேன்மையானதாகும். மற்ற உயிர்களின் உணவிற்காக உழைக்கும் விவசாயிகளின் உழைப்பையும் – தியாகத்தையும் நாம் போற்றி வணங்குவதோடு, விவசாயிகளையும் – விவசாய நிலங்களையும் பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கு வழங்கவேண்டும். விவசாயிகளின் துயர்நீங்க வறட்சியில்லா தமிழகத்தை உருவாக்கி, விவசாயிகளின் வாழ்வில் வளர்ச்சி ஏற்படவும், தமிழக மக்களின் வாழ்வு உயரவும், உலகளவில் இந்தியர்களின் ஒற்றுமை உயர்ந்து, தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாடு மேம்பட நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். இயற்கை – உழைப்பு – நன்றி உணர்வு – பண்பாடு ஆகியவற்றை உணர்த்தும் இப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் என் உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies