கடந்த வருடம் :09.02.2024 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன தேர்வுக்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் நாள் (21.07.2024) தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் இருந்து 25606 பேர் தேர்வு எழுதினார்கள். தற்போது, தமிழக அரசு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் வெறும் 2786 பணியிடங்களை மட்டுமே நியமனத் தேர்வின் மூலம் நிரப்பப்படுவார்கள் என அறிவித்துள்ளது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது. 2023–24 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறையில் கண்டறியப்பப்பட்ட காலி பணியிடங்கள் 8643 எனவும், பொது மாறுதல் தடைபெற்ற பின்னர் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க பள்ளிகளில் உள்ள பணியிடங்கள் 5786 எனவும் வட மாவட்டங்களான சேலம் – நாமக்கல் – கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை – வேலூர் – திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் உள்ள காலி பணியிட சதவீதம் 72.32% எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12 ஆண்டுகளாக ஒரு தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படாமல் உள்ளது. 2024 ம் ஆண்டில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் முழுவதையும் நிரப்பினால், நியமன தேர்வு எழுதி எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வதாரம் மட்டும் இன்றி மாணவர்களின் கல்வி நலமும் பாதுகாக்கப்படும் என்பதோடு, அரசுத் தொடக்கப்பள்ளியில் பயிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பின்னனியில் உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அரசு தொடக்கப் பள்ளியின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்திலும் ஆசிரியர்கள் பணிநியமனங்களை முழுவதுமாக நிரப்ப தமிழக அரசு வழிவகைசெய்ய வேண்டுமென இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies