Loading...

செய்திகள்

Mar 21, 2025
News Image

தெருநாய்களைக் கட்டுப்படுத்த நீதிமன்றங்கள் மூலமாக நிரந்தரத்தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக அரசுக்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வேண்டுகோள்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழுவதம் தெருநாய்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சாலையில் செல்லும் மக்கள் நாய்கடிக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்த காணொளிக்காட்சி என் நெஞ்சை பதைபதைக்கச்செய்தது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 77,540 நபர்கள் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக மார்ச் 19-ஆம் தேதி ஒரே நாளில் திருச்சி மணப்பாறை பகுதியில் 20 பேர் தெருநாய் கடிக்கு ஆளாகியுள்ளதாகவும், இரு மாதங்களில் மட்டும் அங்கு 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த முன்று மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் தெருநாய்கள் கடிக்கு பலியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அரசு மனநலகாப்பக வளாகத்துக்குள் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அங்கு 30-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ரேபிஸ் தொற்று பரவும் சூழல் எழுந்துள்ளதாக சுகாதார ஆர்வளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் மனநல காப்பகத்தில் மாதத்திற்கு 3 அல்லது 4 பேர் நாய்க்கடிக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. “ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனுசனை கடிக்கிறார்” என்ற பழமொழி உண்டு. அதுபோல் தெரு நாய்கள் ஆடு – மாடு என கடித்து, தற்போது மக்களை கடித்துக்கொண்டு பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது. தெருநாய்களின் கருத்தடைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியும் தெருநாய்கள் குறைந்தபாடில்லை. கணக்கற்ற தெருநாய்களால் கடந்த ஆண்டில் 4.8.லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 பேர் ரேபிஸ் நோயால் பாதித்து உயிரிழந்துள்ளனர் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நீதிமன்றங்கள் மூலமாக நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News