சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞரின் மரணம், மிகவும் துயரமான செய்தி. மேலும் இது தமிழக மக்களின் மனக்குமுறலாகவும், மனித உரிமை மீறலாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு இளைஞன் தனது எதிர்காலம் குறித்து கனவு கண்டபோது, அவன் உயிரோடு இருப்பதற்கான அடிப்படை உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும் என்பது சமுதாயத்தின் பொறுப்பு. மனித உரிமைகள் என்பது ஒரு நாட்டின் உரிமைச் சின்னம். அதை பாதுகாக்காத அரசு நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்ட இயலாது. அஜித் குமாரின் மரணம் அதிகாரிகள் மீதான நம்பிக்கையற்றதன்மையும், சந்தேக செயல்பாடுகளாகவே மாறுகிறது. இது ஒரு தனிப்பட்ட மரணம் அல்ல; மக்களின் மனித உரிமைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கும் வெளிப்பாடாகவே நாம் இதைப் பார்க்க வேண்டும். இந்தச் சம்பவம் மீதான முழுமையான விசாரணை, நேர்மையான நீதித் தீர்ப்பு மற்றும் அஜித் குமார் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இனி யாருடைய உயிரும் முறைகேடுகளால் மாயாமல் இருக்க, அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எனது சார்பிலும் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies