கடந்த 12-ம் தேதி சென்னை – காஞ்சிபுரம் – திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை புரட்டிப்போட்ட புயல் - மழையால் இந்த மூன்று மாவட்ட மக்களும் நிலைகுலைந்து போனார்கள். பருவமழை பொய்த்தாலும்,புயல்மழையின் மூலம் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என மக்கள் நம்பினர். அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் மழையின் அளவு குறைந்தும், புயலின் வேகம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்தும் வீசியது.
இந்த புயலின் சீற்றத்தால் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. பல ஆயிரம் மரங்களின் கிளைகள் முறிந்து சாலைகளிலும், பூங்காக்களிலும் வீழ்ந்து கிடந்தன. கடந்த 2015 டிசம்பர் மாதம் மழையால் சேதம் என்றால், இந்த ஆண்டின் டிசம்பரில் காற்றால் சேதம் விளைந்துள்ளது.
தமிழக அரசு இயந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தி பெருமளவிலான சேதத்தினை முதலமைச்சர் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தவிர்த்தார். அதற்காக கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் அவரை பாராட்டினர். உடனடியாக 500 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தினார்.
அதனையடுத்து, கடந்த 19-ம் தேதி டெல்லிக்கு சென்று பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை சந்தித்து, புயல் பாதிப்புகள் குறித்து விளக்கி, தமிழகத்தின் பொதுவான தேவைகள் குறித்த பட்டியலையும் அளித்தார். புயல் நிவாரணப்பணிகளின் ஒரு பகுதியாக மத்திய பார்வையாளர் குழுவை அனுப்பி வைப்பதாக பிரதமர் மோடி அவர்கள் உறுதியளித்தார். எனினும் புயல் அடித்து17-நாட்கள் கடந்த பின்னரே மத்திய குழு இன்று (28.12.2016) தமிழகம் வந்துள்ளது.
புயல் நிவாரணப்பணிகளை தமிழக அரசும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் முன்னின்று செயலாற்றிய நிலையிலும், புயலின் பாதிப்புகள் வெறும் புகைப்படங்களாக மட்டுமே உள்ள நிலையிலும் மத்திய குழுவின் ஆய்வு எந்த அளவிற்கு அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. காயத்தின் ரணம் ஆறி அதன் வடுக்களை மட்டுமே பார்வையிடும் மருத்துவரின் செயல்போல் உள்ளது மத்திய குழுவினரின் வருகை.
எனினும், மத்திய உள்துறை இணைச் செயலாளர் திரு.பிரவீன் வசிஷ்டா தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினை வரவேற்கிறோம். ஏற்கனவே தமிழக முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கோரிய 12 ஆயிரம் கோடியே 575 ரூபாய் புயல் வெள்ள நிவாரண நிதியை குறைக்காமலும்,காலதாமதமின்றியும் வழங்கவேண்டும்.
மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து அழிந்து விட்டதை ஈடு செய்யும் வகையில் உலக நாடுகளின் உதவியை கோருதல், புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் சில ஆயிரம் மரங்களையாவது மறுபதியம் இடுதல் போன்ற வாய்ப்புகளை தமிழக அரசு பெறுவதற்கான நடவடிக்கைகளையும் இக்குழுவினர் கருத்தில் கொண்டு, தங்கள் ஆய்வுப் பணியினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
Powered by iPOT Technologies