முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு சாசனமாகும். கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு தடைகளையும் தாண்டி, சட்ட போராட்டங்களில் சிக்கி மீண்டு வந்துள்ள இவ்வழக்கின் தீர்ப்பு, பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான எச்சரிக்கை மணியாகும்.
அரசியல் என்பது மக்கள் சேவையாற்றக்கூடிய களமாகவும் – தளமாகவும் இருந்த நிலைமாறி, எளிதாகவும் – விரைவாகவும் பணம் ஈட்டக்கூடிய சூதாட்டமாக தற்போது மாறி வருவது, இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் ஆபத்தின் அறிகுறியாகும். நிலைமை கைமீறி போவதற்கு முன்பாகவே, அரசியல் வாதிகளை மடைமாற்றி நேர்வழியில் செல்லவைக்கும் மைல்கல்லாக இத்தீர்ப்பினை கருதுகின்றோம்.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையை நீக்கி, நிலையான அரசு அமைய மேதகு ஆளுனர் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவின் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுகின்றது. இது தமிழகத்தின் வளர்ச்சியை முடமாக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இந்நிலையில், மீண்டும் ஒரு சட்டமன்றத்தேர்தலை சந்திக்கும் நிலை உருவானால், அது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும். ஏற்கனவே கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு இது கூடுதல் சுமையாக மாறிவிடும்.
எனவே, அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், மக்கள் நலன் கருதி இந்த ஆட்சி தொடர்வதற்கு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். தங்களின் சொந்த விருப்பு – வெறுப்புகளை புறந்தள்ளிவிட்டு, மீண்டும் ஒரு இடைத்தேர்தலை தவிர்க்கவும், தொய்வின்றி மக்கள்பணி தொடரவும் இணைந்து பணியாற்ற வேண்டும். அவ்வாறு அமையும் ஆட்சிக்கு - இந்திய ஜனநாயக கட்சி, தன் தார்மீக ஆதரவினை வழங்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies