இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் மாபெரும் வெற்றியினை ஈட்டியுள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கின்றது. 7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களின் மிகப் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறந்த நாடாளுமன்ற வாதியான திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்திய அரசியல் சட்டம் மற்றும் ஆட்சி நிர்வாகங்களின் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்தவராவார். மேலும், பீகார் மாநில ஆளுநராகவும் திறம்பட செயலாற்றியுள்ளார்.
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க உள்ள திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசின் செயல்திட்டங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்ற வேண்டும் எனக்கூறி, அவருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies