தங்களின் அளப்பரிய தியாகத்தினாலும், தன்னலமற்ற அர்ப்பணிப்பினாலும் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தலைவர்களையும் – தியாகிகளையும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
விடுதலை பெற்று 70 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், நம் அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனைகளில் மாற்றம் வேண்டும் எனக் கருதப்பட்டது. அதனால், நமது அரசியல் சட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. சமூக வளர்ச்சிக்கும் - தேவைக்கும் ஏற்ப அரசியல் சட்டங்களில் மாறுதல் கொண்டு வந்ததைப்போலவே, பொருளாதார சிந்தனைகளிலும் மாற்றங்கள் வரவேண்டும் என்பதே நடைமுறை உண்மையாகும்.
அதன் தொடர்ச்சியாக, உயர் மதிப்பு ரூபாய் தாள்களுக்கு தடை, பொருள் மற்றும் சேவை வரிவிதிப்பு, மின்னணு பணபரிமாற்றம், பெருமளவிலான மானியங்கள் குறைப்பு, ஊழலுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் என பல முற்போக்கான நடவடிக்கைகளை திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இவைகள் கடுமையான நடவடிக்கைகள் என விமர்சிக்கப்பட்டாலும், இதுபோன்ற புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்தும் என்பதில் ஐயம் இல்லை. எதிர்வரும் காலம் - இந்தியாவின் காலமாக அமைய நாம் அனைவரும் ஒருங்கினைந்து பாடுபட்டு, இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் எனக்கூறி, இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies