அனைத்து கொடைகளிலும் தலையாயது – சிறப்புமிக்கது கல்விக்கொடையே ஆகும். கல்வியின் மூலம் இந்நாட்டு மாணவர்களுக்கு முன்மாதிரி ஆசிரியராகத் திகழ்ந்தவர் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரின் நினைவை போற்றும் வகையில் அவரின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றோம்.
தமக்கான பணிகளை வேலையாகக் கருதாமல் அதனை சேவையாகக் கருதுவதே ஆசிரியர் பணியின் பெருமைகளுக்கு காரணம். சாதாரண கிராமப்புற மாணவர்கள் முதல், பெருநகர மாணவர்கள் வரை அனைவருக்கும் ஒரே தரத்தினாலான கல்வியை வழங்க வேண்டும் என்பதே நமது குறிக்கோளாகும்.
அகில இந்திய அளவில் தமிழக மாணவர்களும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கலந்து கொண்டு பெருமளவிலான வெற்றியை பெறுவதற்கு, தரம் உயரத்தப்பட்ட பாடத்திட்டமும், கற்பித்தலில் நவீன முறைகளை கையாண்டு – வரும் தலைமுறைக்கு நம்பிக்கை மிகுந்ததொரு வழிகாட்டலை ஆசிரியர் சமுதாயம் உருவாக்க வேண்டுமெனக் கூறி, அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies