சென்னை மதுரவாயல் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி அவர்கள் இன்று(13.12.2017) அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில், 3.5 கிலோ அளவிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை காவல் ஆய்வாளர் பெரியபாண்டி அவர்கள் விசாரித்து வந்துள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கொள்ளை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இக்கொள்ளையில் ஈடுபட்டு தப்பியோடிய மேலும் இரண்டுபேரை தேடும் பணியில் காவல்துறையின் தனிப்படையினர் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி தப்பியோடிய இரண்டு பேரும் ராஜஸ்தான் மாநிலம் பாலி என்கின்ற ஊரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியும், மற்றொரு காவல் ஆய்வாளர் முனிசேகரனும் ராஜஸ்தான் மாநிலம் பாலியில் அவர்களை கண்டுபிடித்து, கைதுசெய்து அழைத்துவந்தபோது, திடீரென அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி அவர்கள் மரணமடைந்துள்ளார். உடன் சென்ற மற்றொரு காவல் ஆய்வாளர் முனிசேகரன் அவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குற்றவாளிகளைப் பிடிக்க ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு காவல்துறை அதிகாரிகள் செல்லும்போது, மாநிலங்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் முக்கியமான ஒன்றாகும். இதனை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்து அதனை உறுதிசெய்யவேண்டும்..
தகவல் பரிமாற்றத்தில் போதிய கவனம் செலுத்தப்படாததாலோ அல்லது பாதுகாப்பு குறைபாடுகளாலோதான் இதுபோன்ற தாக்குதல்களும், உயிரிழப்புகளும் நடைபெறுன. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து போதிய ஆலோசனைகளை வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies