குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. குறிப்பாக குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் –பாரதிய ஜனாதா கட்சிக்கும் ஒரு கௌரவ பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தது.
ஒரு கட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தினாலே ஏற்படக்கூடிய அதிருப்தி வாக்குகளை குறிப்பிட்ட அந்த ஆளும் கட்சி சந்தித்தாகவேண்டும். அவ்வகையில் 22 ஆண்டுகள் தொடர்ந்து குஜராத்தில் பாஜக ஆட்சி செய்தபோதும் பெற்றிருக்க கூடிய இந்த வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு தருவதாகக் கூறி, அந்த சமுதாயத்தினரின் வாக்குகளை பிரித்த நிலையிலும், கடன் தள்ளுபடி – இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சி திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையிலும், மக்கள் அவைகளுக்கெல்லாம் செவி கொடுக்காமல் வாக்களித்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகின்றது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST வரிக்கொள்கை ஆகியவற்றின் மூலம் மிகப்பெரும் மக்கள் எதிர்ப்பினை பாஜக அரசு எதிர்கொள்ளும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். எனினும், கசப்பு மருந்தாக இருந்தாலும் உடலுக்கு நல்லது என்பதைப்போல், சில அசௌகர்யங்களை மக்கள் சந்தித்தாலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு, துணிச்சலான இந்த சட்டங்கள் உதவி செய்யும் என்பதை உணர்ந்து அளித்துள்ள இவ்வெற்றிக்கு மூலகாரணமாக இருந்த பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுக்கும் - பாஜக-வின் தேசியத் தலைவர் திரு. அமித்ஷா அவர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies