பழந்தமிழ் இலக்கியங்கள் மீது பற்றுகொண்டவரும், கல்வெட்டு மற்றும் எழுத்தியல் துறையின் சிறந்த நிபுணருமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருந்துகின்றேன்.
1987 – ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை ‘தினமணி’ பத்திரிக்கையின் ஆசிரியராக அவர் இருந்தபொழுது, பல அரிய கட்டுரைகளை எழுதியுள்ளார். குறிப்பாக சிந்துசமவெளி எழுத்துக்களுக்கும், திராவிட மொழி குடும்பத்திற்குமான தொடர்பினை பல்வேறு கட்டுரைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் சிந்தி எழுத்துக்கள் மற்றும் பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நுட்பமான பல தகவல்களையும் தெரிவித்துள்ளார். மேலும், 27 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணியில் திறம்பட செயலாற்றியுள்ளார். இவரின் சேவைகளைப் பாராட்டி, கடந்த 2009 – ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
அவரின் மறைவு பத்திரிக்கை துறைக்கும், கல்வெட்டு ஆய்வுத் துறைக்கும் மிகப்பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies