உலக மக்கள் அனைவரையும் உயிர் பயத்தில் உறைய வைத்திருக்கும், கொடிய தொற்றுநோயான கொரானாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சையில் 738 பேர் உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில்
64 ஆயிரம் பேர் உள்ளதாகவும் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளதாகவே கருதலாம். இன்னும் கூட அரசுடனும், காவல்துறையினருடனும் பொதுமக்கள் ஒத்துழைத்தால் மிக விரைவில் நாம் ஆபத்திலிருந்து மீண்டு வரலாம்.
இந்த தொற்றுநோயை எதிர்த்து அழிக்க இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது ஒன்றே பாதுகாப்பான வழிமுறையாகும். எனவே பொதுமக்களும், குறிப்பாக இந்திய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களும் ஊரடங்கு உத்தரவினை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும், அவரவர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்துவர வேண்டும் எனவும கேட்டுக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies