கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் – மீட்பு நடவடிக்கை - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமலும், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையிலும்; மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததைக் கண்டித்தும், இன்று (மே 7-ம் தேதி) ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும், இன்று காலை 10.00 மணிக்கு அவரவர்கள் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு அதிகமாகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, “கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க அரசைக் கண்டிக்கிறோம்” என முழக்கமிட்டுக் கலைவதென்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐஜேகே நிறுவனருமாகிய, நமது உத்தமத் தலைவர் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களும், நானும் வளசரவாக்கத்திலுள்ள எங்கள் இல்லத்தில் இருந்து காலை 10.00 மணிக்கு, ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்புவோம். இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும் – தொண்டர்களும் அவரவர்களின் இல்லங்களில் இருந்தவாறே, “கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க அரசைக் கண்டிக்கிறோம்” என முழக்கமிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies