தன்னுடைய ரசிகர்களுக்கு சமூக சிந்தனையையும், பகுத்தறிவையும் நகைச்சுவை மூலமாகக் கொண்டு சென்றவர் ‘பத்ம ஸ்ரீ’ டாக்டர் விவேக் அவர்கள். அவருடைய நகைச்சுவையால் பலரை சிந்திக்க வைத்தவர். மறைந்த குடியரசுத்தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்றவர். அவரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகமெங்கும் பல லட்சக்கணக்கான மரங்களை நட்டு நம் மாநிலத்தின் இயற்கை வளத்தை காக்கும் மனிதராக திகழ்ந்தவர், சிறந்த குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் – எழுத்தாளர் – சமூக ஆர்வலர் என பன்முகங்கள் கொண்டவர். இளைஞர்களுக்கு ஒர் வழிகாட்டியாக இருந்த, ‘பத்ம ஸ்ரீ’ டாக்டர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கே பெரும் இழப்பாகும்.
இந்த நேரத்தில் நடிகர் விவேக் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினரின் துயரில் பங்குகொள்கின்றேன். அவரின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் - தமிழ்த்திரையுலக ரசிகர்களுக்கும் – நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
வருத்தங்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி
Powered by iPOT Technologies