Loading...

செய்திகள்

Jan 10, 2023
News Image

தமிழகம் அமைதிப்பூங்காவாகவும் முன்மாதிரி மாநிலமாகவும் திகழ நாம் எப்போதும் சகோதரத்துவத்துடன் நடந்துகொள்ளவேண்டும் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை

சட்டமன்றத்தில் நேற்றைய தினம் (09.01.2023) முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது.  இக்கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வழங்கிய உரையை ஆளுநர் வாசிப்பது வழக்கம். நேற்றைய தினம் தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையில், சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தபோது,  வேண்டுமென்றே தவிர்த்ததாகவும், தமிழக அரசு தயாரித்துக்கொடுத்த உரையை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறவேண்டும் எனவும் தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. ஆளுநர்  உரையாற்றுகின்றபோது, மற்றவர்கள் பேசுவதென்பது சட்டசபை மரபல்ல. மேலும், ஆளுநர் தேசியகீதம் இசைக்கும் முன்பே அவையைவிட்டு வெளியேறிவிட்டார். இதுவும் சட்டசபை மரபல்ல.

இதைக்காரணமாக வைத்து கட்சியினர்களுக்கிடையே வன்முறையை தூண்டுவதென்பது பொதுமக்களுக்கு இடையூறு விளைப்பதாகவே இருக்கின்றது.

மேலும், கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழ்நிலைகளில், தமிழகத்தை முன்னேற்றப்பாதையை நோக்கி வழிநடத்தவேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் இருவருக்குமான இந்த முரண்பாடு நல்ல தீர்வினை அளிக்காது. அனைத்து தரப்பினரும்    ஒன்றுபட்டு, சகோதரத்துவத்துடன் இருந்து, அமைதிப்பூங்காவாக - நல்லதொரு மாநிலமாக தமிழகம் உருவாகவேண்டுமென்பதே நம் அனைவரின் விருப்பமும் – பொதுமக்களின் எதிர்பார்ப்பும் ஆகும் என்பதை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன். 

 

 

அன்புடன்,

டாக்டர் ரவிபச்சமுத்து

தலைவர்

இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

 

Back to News