Loading...

செய்திகள்

Jan 14, 2023
News Image

“உழவும் – உழைக்கும் விவசாய பெருங்குடிமக்களும் எக்காலத்திலும் போற்றி – பாதுகாக்கப்படவேண்டியவர்கள்” டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று விவசாய பெருங்குடி மக்களை புகழ்ந்துபாடிய திருவள்ளுவரின் கூற்றுக்கேற்ப,  உழவுத்தொழில் புரிந்து மற்ற அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகள் தங்கள்  உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் நாள் பொங்கள் திருநாள்.

 அனைத்திற்கும் மேலாக, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இவ்வாண்டு அவர்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்ற ஆண்டாக அமையப்போகின்றது, 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அரிசி உணவு அதிகரித்து, சோளம் – கம்பு – கேழ்வரகு – தினை – வரகு – சாமை - குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு வெகுவாக்க் குறைந்துவிட்டது. குறைந்த வயது, அதிக ஊட்டச்சத்து, வறட்சியை தாங்கி வளரும் தன்மை மற்றும் பூச்சி நோய் அதிகம் தாக்காத நிலை போன்ற காரணங்களினால், மானாவாரி நிலங்களில், சிறுதானியங்களை சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட இயலும். இதன்மூலம் விவசாய பெருங்குடி மக்கள் பெருமளவில் பயனடைவர்.

நமக்கு உணவளிக்கும் விவசாயப் பெருமக்களையும் – விவசாய நிலங்களையும் நாம் போற்றி பாதுகாத்து, வருங்கால தலைமுறைகளுக்கு வளமான தமிழகத்தை உருவாக்கித்தருவது நம் அனைவரின் கடமையாகும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

வாழ்த்துக்களுடன்,

டாக்டர் பாரிவேந்தர் M.P,

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.

 

Back to News