Loading...

செய்திகள்

Apr 21, 2023
News Image

ஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் - ரம்ஜான் திருநாள் வாழ்த்துச் செய்தி –

 

 மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றார்கள்.

ஏழ்மையை அறிந்து கொள்ளவும்,  பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும்,  உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்பாகும். மக்கா, மதீனா சென்று தர்மம் செய்ய இயலாதவர்கள், ரமலான் மாதத்தில் நோன்பிருந்து தர்மம் செய்வது  மக்கா – மதீனா செல்வதற்கு சமமாகும்,  “செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை சேர்ப்பதல்ல,  போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வம்”  என்ற வாழ்க்கை நெறிகளை இஸ்லாமிய பெருமக்களுக்கு  மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் போதித்த அண்ணல் நபிகள் பெருமானின் நெறிகளை அனைவரும் பின்பற்றி வாழவேண்டும் எனக்கூறி,  அனைத்து இஸ்லாமிய சகோதர – சகோதரிகளுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என்னுடைய புனித ரமலான் திருநாள்  நல்வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

 

வாழ்த்துக்களுடன்,

டாக்டர் ரவிபச்சமுத்து

தலைவர்

இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

 

Back to News